கிள்ளான், ஜூலை 21 — கிள்ளான், தாமான் ஸ்ரீ அண்டலாஸ், ஜாலான் ஸ்ரீ சரவாக் 19-இல் உள்ள வணிக வளாகங்களில் உரிம நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிமுறைகளை மீறியதற்காகக் கிள்ளான் அரச மாநகர மன்றம் (MBDK) ஐந்து பறிமுதல் நோட்டீஸ்களையும் ஐந்து அபராதங்களையும் விதித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், முடி திருத்தகம், உணவகங்கள், மூலிகைக் கடைகள் மற்றும் சிறிய ரகச் சந்தைகள் (Mini Market) உட்பட எட்டு வணிக வளாகங்களில், உரிமத் துறை மற்றும் அமலாக்கத் துறை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த சோதனையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக MBDK தெரிவித்துள்ளது.
சில வணிக வளாகங்கள் முறையான உரிமம் இன்றி இயங்கி வந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களை உரிமமின்றி விற்பனை செய்தது மற்றும் நடைபாதைகளில் தடைகளை ஏற்படுத்தியது ஆகிய தவறுகளுக்காகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமுலில் உள்ள நகராண்மைக் கழக விதிமுறைகள் மற்றும் சட்டப் பிரிவுகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை சுமூகமாகவும் கட்டுப்பாட்டுடனும் நடத்தி முடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் வாழ் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அனைத்து வணிக நடவடிக்கைகளும் விதிமுறைகளுக்கும் உரிம நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நடப்பதை உறுதிசெய்ய இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் MBDK வலியுறுத்தியுள்ளது.








