ஷா ஆலாம், ஜூலை 21 — கோலா லங்காட்டில் நடைபெற்ற 'இளைஞர் முழக்கம்' (Youth Speaks @ Cuppa With Community Leaders) என்ற கலந்துரையாடல் நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சி ஆகியவை முக்கிய மையப் பொருளாக அமைந்தன. இதில் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில செயற்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் கலந்து கொண்டார்.
கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் (MPKL) மண்டலம் 6-க்கான சிலாங்கூர் இளைஞர் இயக்கவாதிகள் (PeBS) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இளைஞர்கள் தங்களின் குரல்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாக அமைந்தது என்று அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"வேலைவாய்ப்பு, இளைஞர் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை மற்றும் மக்கள் சார்ந்த தற்போதைய விவகாரங்கள் குறித்து இளைஞர்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் நேரடியாகக் கேட்டறிவதற்கு இந்தத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது," என்றார் அவர்.
அரசின் திட்டங்களும் கொள்கைகளும் இளைஞர்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப அமைவதை உறுதி செய்ய, இதுபோன்ற கலந்துரையாடல்களில் தாம் தீவிரமாகப் பங்கேற்பது அவசியமானது என்றும் அவர் கூறினார்.
தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், பந்திங் சட்டமன்றத் தொகுதியின் மேலும் முற்போக்கான மற்றும் வளமான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் இதுபோன்ற பல திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் பாப்பாராய்டு தெரிவித்தார்.








