சூப்பர் எல் நினோ அபாயம்: முன்கூட்டியே தயாராக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

19 ஜூலை 2026, 8:56 AM
சூப்பர் எல் நினோ அபாயம்: முன்கூட்டியே தயாராக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை 19: இந்த ஆண்டின் பிற்பகுதியில் மலேசியாவைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் எல் நினோ' (Super El Nino) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாடு இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்று பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணியின் (Alliance for a Safe Community) தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை வலியுறுத்தியுள்ளார்.

பொது சுகாதாரம், நீர் ஆதாரங்கள், விவசாயம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது இந்த அலையின் தாக்கத்தைக் குறைப்பதற்குத் தீவிரமான நடவடிக்கைகள் தற்போதே எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மலேசியாவில் சூப்பர் எல் நினோ நிகழ்வு தொடங்கலாம். அது நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் அதன் உச்சத்தைத் தொடக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக 'தி ஸ்டார்' (The Star) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வானிலை முன்னறிவிப்பைக் கண்டு மக்கள் பீதியடையாமல், முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒரு முக்கிய எச்சரிக்கையாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் காலநிலை நிகழ்வானது வழக்கத்தை விட மிக அதிக வெப்பநிலை, நீண்ட வறண்ட காலம், குறைந்த மழைப்பொழிவு மற்றும் குறிப்பாகப் பருவமழைக்காலத்திற்குப் பிறகு கடுமையான புகைமூட்ட அபாயத்தைக் கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதியவர்கள், சிறு குழந்தைகள், வெளிப்புறங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், வெப்ப அழுத்தம் (Heat stress) மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) போன்ற வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகும் அதிக அபாயத்தைக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

நீர்ச் சேமிப்பு முயற்சிகளை வலுப்படுத்துதல், குழாய் கசிவுகளைக் குறைத்தல், நீர்ச் சேமிப்புத் திறனை விரிவாக்குதல் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு அவசரகாலத் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றின் மூலம் நீர் ஆதார மேலாண்மை தற்போதே பலப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், திறந்தவெளி எரிப்பு, காடு மற்றும் நிலத்தீ ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விரைந்து செயல்பட அவசரகால மீட்புக் குழுவினர் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நீர்ச் சேமிப்பு, தீ விபத்துத் தடுப்பு மற்றும் தனிப்பட்ட ஆரோக்கிய முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், நிலைமை மோசமடைந்தால் அவசரகாலத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த ஏதுவாக கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ லீ லாம் தை மேலும் விவரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.