கிள்ளான், ஜூலை 19: கிள்ளான் மாவட்டத்தில் உள்ள பள்ளி உணவகங்களின் (School Canteens) நடத்துநர்கள் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்யும் நோக்கில், அவர்களுக்கு முறையான உரிமங்களை வழங்கும் திட்டத்தைக் கிள்ளான் அரச மாநகர மன்றம் (MBDK) தீவிரப்படுத்தியுள்ளது.
மாநகர மன்றத்தின் உரிமத் துறையினால் முன்னெடுக்கப்படும் இந்த விழிப்புணர்வு மற்றும் அமலாக்கத் திட்டம், கிள்ளான் மாவட்ட இஸ்லாமிய விவகார அலுவலகம், கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம், கிள்ளான் மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் புக்கிட் திங்கி மருத்துவ மையம் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்போடு தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி உணவகங்களின் மேலாண்மைத் தரம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்துவதோடு, பள்ளி மாணவர்களுக்குத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
"இந்த முன்முயற்சியானது தூய்மையான, பாதுகாப்பான உணவை வழங்குவதற்கும், உணவு வளாகங்களை இயக்குவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் (SOP) பின்பற்றுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
மேலும், உணவைக் கையாளும் அனைத்துப் பணியாளர்களும் செல்லுபடியாகும் உணவு கையாளுதல் சான்றிதழ் (Food Handling Certificate) மற்றும் டைபாய்டு எதிர்ப்புத் தடுப்பூசி (Anti-typhoid Vaccination) பெற்றிருப்பதை இது உறுதி செய்கிறது," என்று மாநகர மன்றம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த உரிமம் தொடர்பான கூடுதல் விபரங்களைப் பெற விரும்பும் பள்ளி உணவக நடத்துநர்கள், மாநகர மன்றத்தின் உரிமத் துறையை 03-3375 5555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.







