ஷா ஆலம், 17 ஜூலை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய தொழிலாளர்களின் பணிகளை முற்றிலுமாகப் பறித்துவிடாது; மாறாக, இத்தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள், AI திறன்கொண்ட தொழிலாளர்களால் மாற்றப்படும் அபாயமே உள்ளது என சிலாங்கூர் திறன் - தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் (STDC) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹரிசால் ஹமீத் தெரிவித்தார்.
"டிஜிட்டல் மயமாக்கலைச் சார்ந்துள்ள பல துறைகள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும். இது பாதிப்பு அல்ல, மாறாக AI தொழில்நுட்பத்தை இன்னும் பரவலாகப் பயன்படுத்துவதை நோக்கிய ஒரு பரிணாம வளர்ச்சி ."உண்மையில் AI தற்போதைய தொழிலாளர்களை நீக்காது, மாறாக AI தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களால் அவர்கள் மாற்றப்படுவார்கள். இந்த உண்மையை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூர் (Media Selangor) ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்தத் தொழில்நுட்பப் புரட்சியால் டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) துறைகளே அதிகம் மாறக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதே வேளையில் மற்ற அனைத்துத் துறைகளுமே ஏதோ ஒரு வகையில் டிஜிட்டல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளன என்பதையும் நினைவூட்டினார்.
"இதில் அதிகம் மாற்றமடைவது டிஜிட்டல் மயமாக்கல் சார்ந்த துறைகளாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலைச் செயல்படுத்தாத துறைகள் ஏதேனும் உண்டா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வருகிற 2035-ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலான வழக்கமான பணிகள் AI மூலம் மாற்றியமைக்கப்படும் என்றும், அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் 'AI முகவர் மேலாளர்' (AI Agent Manager) போன்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் டாக்டர் ஹரிசால் கணித்தார்.
எனவே, இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக AI சார்ந்த புதிய திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனிசெல் (UNISEL) பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான அவர் அறிவுறுத்தினார்.
"டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தி வழிநடத்தக்கூடிய திறன்மிக்க தொழிலாளர்களே நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். நாம் நமது வேலைகளை AI-யிடம் இழக்கப் போவதில்லை, மாறாக AI தொழில்நுட்பத்தில் நம்மைவிட அதிகத் தேர்ச்சி பெற்றவர்களிடமே இழக்க நேரிடும்."அதனால்தான் கல்வி நமது முதன்மை இலக்குகளில் ஒன்றாக உள்ளது. சமுதாயத்திற்கு விரிவான முறையில் டிஜிட்டல் அறிவை (Digital Literacy) கொண்டு சேர்க்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்," என்றார் அவர்.
இதுமட்டுமின்றி, புதிய உலகளாவிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவிற்கான AI திறமையாளர்களின் மையமாக (Talent Hub) மலேசியா உருவெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







