குவாலா பிளா, ஜூலை 14 - 16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மெந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன், லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரான அமினுடின் 2008-ஆம் ஆண்டுத் தொடங்கி கடந்த நான்கு தவணைகளாக சிகாமாட் சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், 2013-ஆம் ஆண்டு தொடங்கி தாம் வகித்து வரும் சென்னா( Chennah ) சட்டமன்றத் தொகுதியில் டிஎபி தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றிரவு, கூட்டணி கட்சிகளின் உச்சநிலை தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் , நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை அக்கூட்டணியின் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
அத்தேர்தலில், அக்கூட்டணி சார்பில் ஐந்து இந்தியர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெராம் பாடாங் தொகுதியில் ஜி. மணிவண்ணன் நீலாய் தொகுதியில் ஜே.அருள் குமார், சிரம்பான் ஜெயா தொகுதியில் எஸ்.முகுந்தன்,ஶ்ரீ தஞ்சோங் தொகுதியில் டாக்டர் ஜி.ராஜசேகரன், ரெபா தொகுதியில் எஸ்.வீரப்பன் ஆகியோர் அவர்களாவர்.
இவ்வாரம் சனிக்கிழமை நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் நிலையில், ஜுலை 28-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு தினமாகவும், ஆகஸ்ட் முதலாம் தேதி வாக்களிப்பு தினமாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.







