ஷா ஆலாம், ஜூலை 14 - ஷா ஆலாம், ஜாலான் புக்கிட் கெமுனிங்கில் இன்று காலை நேரிட்ட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்தில், நான்கு சக்கர (4WD) வாகனத்தை ஓட்டிச் சென்ற 31 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கோர விபத்து குறித்து இன்று காலை 10.27 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினர், அங்கு ஒரு டிரெய்லர் லாரி, ஒரு டன் எடையுள்ள சிறிய லாரி மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகிய மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகி இருந்ததைக் கண்டறிந்தனர்.
அப்போது, நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுநர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் மீட்கப்பட்ட போதிலும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். அதன்பின்னர், உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை; விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







