ஷா ஆலாம், 13 ஜூலை – இங்குள்ள செக்சன் 25-இல் அமைந்துள்ள பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மையத்தில் (Used car dealership), கார் ஓட்டிப் பார்ப்பதாகக் (Test drive) கூறி கருப்பு நிற ஹோண்டா சிவிக் எஃப்டி (Honda Civic FD) ரக காரைத் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து, அன்று இரவு 10.59 மணியளவில் காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாக ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சரிடின் சமாஹ் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த அன்று இரவு சுமார் 8.30 மணியளவில், தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள எச்என் ஆட்டோமொபைல் (SN Automobil) நிறுவனத்திற்கு வந்த சந்தேகநபர், காரைப் பார்வையிட்டு அதனை ஓட்டிப் பார்க்க அனுமதி கோரியுள்ளார். மேலும், அக்காரை 30,000 ரிங்கிட் ரொக்கப் பணம் கொடுத்து வாங்குவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் விற்பனைப் பிரதிநிதி காரை ஓட்டிப் பார்க்க அனுமதிக்க மறுத்துள்ளார். இருப்பினும், காரின் ஓட்டம் திருப்திகரமாக இருந்தால் உடனடியாக முழுப் பணத்தையும் செலுத்தி, கார் உரிமையாளர் மாற்றத்திற்கான (Ownership exchange) நடைமுறைகளைச் செய்வதாக சந்தேகநபர் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபரைத் தேடும் மற்றும் கைது செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக்குற்றச்செயல் தொடர்பாக குற்றவியல் சட்டப் பிரிவு 392-இன் கீழ் கொள்ளைச் சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இச்சம்பவம் அல்லது சந்தேகநபரின் இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக வழக்கின் புலனாய்வு அதிகாரி முகமது அனுவார் முகமது அமிலாவை 019-2255597 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு சரிடின் சமாஹ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.







