கோலாலம்பூர்,ஜூன் 27 - இன்று அதிகாலையில் டுத்தா-உலு கிளாங் (DUKE) நெடுஞ்சாலையின் ஜாலான் கூச்சிங் வெளியேறும் சரிவுப் பாதையில்( exit ) கார் சறுக்கி மோதி தீப்பிடித்ததில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கருகி உயிரிழந்ததை கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்க துறையின் தலைவர் ஏசிபி மொஹமட் சம்சூரி மொஹமட் இசா உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின் போது BMW 328i Sport கார் ஜாலான் டுத்தாவிலிருந்து செலாயாங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
வேகமாக செலுத்தப்பட்ட அக்கார் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி சாலையோர தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதோடு, தீப்பிடித்தும் கொண்டது.
அந்த கொடூர விபத்தில் உயிரிழந்த இரு பல்கலைக்கழக மாணவர்களும் மலேசியர்கள் ஆவர். அக்காரைச் செலுத்திய 22 வயது மாணவர் அஸ்திரேலியா, குயின்ஸ்லண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி சன்வெ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர்.
காருக்குள் சிக்கிக் கொண்ட அவ்விரு மாணவர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அச்சம்பவத்தில் உயிர் பிழைத்த 20 வயது சிங்கப்பூர் மாணவர், சிறு காயங்களுக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.







