கோலாலம்பூர், ஜூலை 14 - மலேசியாவின் எட்டு மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (METMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கையானது கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் (mm/j) அதிகமான மழைப்பொழிவு பதிவாவதற்கான அறிகுறிகள் தென்படும் போதும் அல்லது அத்தகைய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்த மையம் விளக்கியுள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கையானது ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கை ஆகும். இது வெளியிடப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என மெட்மலேசியா தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும், அதே வேளையில் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வழி உடனுக்குடனான வானிலை தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்







