கோலாலம்பூர், ஜூலை 8 - மலேசியாவின் தீபகற்ப மாநிலங்கள், சரவாக் மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசம் ஆகியவற்றின் பல பகுதிகளில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடா மாநிலத்தில் கோலா மூடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய இடங்களிலும், பினாங்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும்.
பேராக் மாநிலத்தில் கிரியான், லாருட்-மாத்தாங்-செலாமா, மாஞ்சோங் மற்றும் பாகான் டத்தோ ஆகிய மாவட்டங்களும், பகாங் மாநிலத்தில் ரொம்பின் மாவட்டமும் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெகிரி செம்பிலானில் ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய இடங்களுக்கும், மலாக்கா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் தங்காக், செகாமட், மூவார், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில், பிந்துலு பிரிவில் உள்ள தாவாவ் மற்றும் பிந்துலு பகுதிகளும், மிரி பிரிவில் உள்ள சுபிஸ், மிரி மற்றும் மாருடி ஆகிய இடங்களும் பாதிக்கப்படலாம். லபுவான் கூட்டரசுப் பிரதேசத்திலும் இந்த காலப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இந்தத் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வழியாக வெளியாகும் அண்மைத் தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







