ஈப்போ, ஜூலை 14 – மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவதிலும், பள்ளிச் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதிலும் கல்வி அமைச்சு (KPM) முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
கல்வித் துறை அமைச்சின் கீழ் உள்ள பங்குதாரர்கள், கல்வி வல்லுநர்கள், அரசு முகமைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) பிரதிநிதிகளை உள்ளடக்கிய 'கல்வி நிறுவனப் பாதுகாப்பு சீர்திருத்தத்திற்கான சிறப்புச் செயற்குழு' இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
தேவையற்ற சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்கவும், தற்போதுள்ள சூழலை மேம்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் (UNICEF) மற்றும் தேசிய ஆசிரியர் சேவை சங்கம் (NUTP) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்தச் செயற்குழுவில் இணைந்து தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
மாணவர்களுக்கான மனநல பரிசோதனைகள், ஆலோசனை சேவைகள் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசகர்கள் மூலமாகப் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதத்தையும் அனைத்து மாநிலக் கல்வித் துறைகளும் (JPN) மாவட்டக் கல்வி அலுவலகங்களும் (PPD) தற்போதுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, உடனடியாக புகார் செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்களின் ஒழுக்கப் பிரச்சனைகளைக் கையாள்வது மற்றும் அதுகுறித்து புகார் அளிப்பது தொடர்பான 'SOP137' வழிகாட்டுதலின் அடிப்படையிலான சுற்றறிக்கை மூலம் தற்போதுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைக் கல்வி அமைச்சு வலுப்படுத்தியுள்ளது.
"இவற்றுடன் சேர்த்து, மாணவர்களின் அறிவு, ஆளுமை மற்றும் ஆன்மீக அம்சங்களைச் சமநிலைப்படுத்தி, அவர்களின் ஒட்டுமொத்தப் பண்புகளை முழுமையாக வளர்த்தெடுக்கும் நோக்கில் 'மடாணி தலைமுறை ஆளுமை மேம்பாட்டுத் திட்டம்' தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.







