ஷா ஆலாம், 13 ஜூலை – பள்ளி மாணவர்கள் கட்டொழுங்கு (Discipline) விவகாரங்களில், ஆசிரியர்கள் பெற்றோர்களால் அழுத்தத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் நெறிமுறைகளின்படி அமைந்திருப்பதை உறுதி செய்யவும், ஒழுங்குமுறை வழக்குகளைப் பள்ளிகள் முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கத்தின் (NUTP) பொதுச்செயலாளர் ஃபௌசி சிங்கோன் வலியுறுத்தியுள்ளார்.
"இது உடல்ரீதியான தண்டனைகளை வழங்கும் காலம் அல்ல, மாறாக ஆவணப்படுத்தும் காலம் ஆகும். எனவே, எல்லாவற்றிற்கும் முறையான பதிவுகள் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என்றாலோ, பள்ளிக்குத் தாமதமாக வந்தாலோ அல்லது ஏதேனும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டாலோ, அதன் தேதி, தவறிழைத்த விபரம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகிய அனைத்தையும் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
இத்தகைய முழுமையான ஆவணப் பதிவுகள் ஆசிரியர்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, ஏதேனும் சர்ச்சைகள் எழும்போது பள்ளி நிர்வாகமும், ஒழுங்குமுறை வாரியமும் நியாயமான முடிவுகளை எடுப்பதற்குப் பெரிதும் உதவும்.
இதற்கிடையில், பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளியின் விதிமுறைகளின்படியே செயல்பட்ட போதிலும், பெற்றோர்கள் அதனை எதிர்த்து வாதிடுவதால், ஆசிரியர்கள் விதிகளையே அமல்படுத்தத் தயங்கும் நிலை உருவாகியுள்ளது.
"கடந்த காலங்களில் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் தவறிழைத்தாலும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது ஆசிரியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.
மேலும், கல்வி அமைச்சு ஒழுங்குமுறை வழக்குகளைப் புகாரளிப்பதற்கான தெளிவான நடைமுறைகளை ஏற்கனவே வகுத்துள்ளது.
இதற்கிடையில், மாணவர்களின் ஒழுக்கம், ஆளுமை மற்றும் சிறந்த பண்புகளை உருவாக்குவது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதால் பெற்றோர்கள் பள்ளிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.







