பந்திங், ஜூலை 8 - பந்திங் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் காயமடைந்த பள்ளி மாணவி, பந்திங் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் எனப் பெண்கள் மேம்பாடு மற்றும் நலத்துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் (Exco) அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவியைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி தற்போது சுயநினைவுடன், உடல்நலம் சீராக இருப்பதாகப் பந்திங் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மாலிந்தாவதி முகமட் ஃபட்சிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அம்மாணவி முழுமையாகக் குணமடைய இன்னும் ஒரு வாரம் காலம் வரை தேவைப்படலாம் என அன்ஃபால் சாரி குறிப்பிட்டுள்ளார். மாணவியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கும் பட்சத்தில், மருத்துவர்கள் அவரை விரைவில் வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார்கள்.
மேலும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, மாணவியின் உடல் மற்றும் மன ரீதியான மீட்சிக்குத் தேவையான பிந்தைய மருத்துவமனை உதவிகளையும், நெருக்கடி கால ஆதரவையும் (Crisis support) சிலாங்கூர் சமூக நலத்துறை (JKM) வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







