சிங்கப்பூர், ஜூலை 13 – அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதலை ஈரான் விரிவுபடுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான எரிசக்தி விநியோகத்திற்கு இந்த மோதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இதன் முக்கியக் காரணமாகும்.
உலகளாவிய வர்த்தக நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 2.34 அமெரிக்க டாலர் அல்லது 3.08 விழுக்காடு உயர்ந்து, ஒரு பேரல் 78.35 டாலராகப் பதிவாகியுள்ளது. அதே வேளையில், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 2.21 டாலர் அல்லது 3.09 விழுக்காடு அதிகரித்து, ஒரு பேரல் 73.62 டாலராக உயர்ந்தது.
கடந்த வார இறுதியில், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீதான தனது தாக்குதல்களைத் தெஹ்ரான் தீவிரப்படுத்திய வேளையில், ஈரானை இலக்கு வைத்து அமெரிக்காவும் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது.
இந்த நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் மாறி மாறி நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள், பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
தீவிரமடைந்து வரும் இந்தத் தாக்குதல்கள், கடந்த மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.







