கோலாலம்பூர், ஜூலை 10 – ‘பாவி’ (Typhoon Bavi) சூறாவளியால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, கோலாலம்பூர் மற்றும் தய்பே (Taipei) இடையே நாளை மேற்கொள்ளப்படவிருந்த தனது விமானச் சேவைகளை மலேசியா ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் கோலாலம்பூரிலிருந்து தய்பேய் செல்லும் MH366 விமானமும், தாய்பெய்யிலிருந்து கோலாலம்பூர் திரும்பும் MH367 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மலேசியா ஏர்லைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள பயண ஆலோசனைக் குறிப்பில், மாறிவரும் வானிலை நிலவரங்களை தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், விமானச் செயல்பாடுகள் குறித்த அடுத்தகட்ட நிலவரங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பயணிகள் தங்களின் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி (SMS) மூலமாக உடனுக்குடன் தகவல்களைப் பெற்றுக் கொள்ள, மலேசியா ஏர்லைன்ஸ் இணையப்பக்கம் அல்லது செயலியின் (App) ‘My Booking’ பிரிவில் தங்களின் தொடர்பு விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள், தங்களின் பயணக் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறலாம் (Refund) அல்லது அசல் பயணத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பயணத்தை எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றி அதே வழித்தடத்திற்கு மறுபதிவு (Rebook) செய்து கொள்ளலாம்.






