கோலாலம்பூர், ஜூலை 8 - கடந்த பிப்ரவரி 28 அன்று ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட விநியோகத் தடைகளைத் தொடர்ந்து, மலேசிய அரசாங்கம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், ஜூன் 2026 வரையில் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஸ்திரமாகவும் போதுமானதாகவும் நீடிக்கிறது என பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்திலும் நாடு தடையற்ற பெட்ரோலிய விநியோகத்தைப் பெறுவதையும் அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும்.
உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்தச் சூழலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வருகிறது.
நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய அரசாங்கம் மூன்று முக்கிய உத்திகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வருகிறது.
முதலாவதாக, குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் நம்பியிருக்காமல் பெட்ரோலியம் இறக்குமதி செய்யப்படும் புதிய ஆதாரங்களை அரசாங்கம் பன்முகப்படுத்தி வருகிறது. இரண்டாவதாக, பயோடீசல் பயன்பாட்டின் மூலம் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகபட்சமாக மேம்படுத்தி வருகிறது.
மூன்றாவதாக, தடையற்ற நீண்ட கால விநியோக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதுடன், தரவு அடிப்படையிலான தீவிரக் கண்காணிப்பு மற்றும் கடத்தல் முறைகேடுகள் மூலமாக எரிபொருள் கசிவதைத் தடுப்பதற்கான சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் பொருளாதார அமைச்சு மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.






