ஷா ஆலாம், ஜூலை 8 - சிலாங்கூர் மாநிலத்தின் 'தபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர்' (TAWAS) திட்டத்தில் உறுப்பினர்களாக இருந்து, தற்போது 18 வயதை எட்டிய 5,581 பேருக்குத் தலா RM1,500 மதிப்பிலான நிதியுதவி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
நேற்று வரை ஒட்டுமொத்தமாக RM7.51 மில்லியனுக்கும் அதிகமான தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக வாரிசான் அனாக் சிலாங்கூர் அறவாரியத்தின் (YAWAS) தலைமை நிர்வாக அதிகாரி கான் பெய் நெய் தெரிவித்துள்ளார்.
இதில் முதற்கட்டமாக, ஜனவரி முதல் மார்ச் 2008 வரை பிறந்த 3,068 பயனாளிகளுக்கு மின்னணு நிதிப் பரிமாற்றம் (EFT) மற்றும் இ-வாலட் (e-wallet) வழியாக RM4.43 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் முதல் ஜூன் 2008 வரை பிறந்த 2,513 பயனாளிகளுக்கு RM3.08 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 18 வயதாகி ஓராண்டு கடந்த பின்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால், சிலாங்கூர் மாநில அரசின் தற்போதைய விதிகளின்படி அவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதியற்றவர்களாகி விடுவார்கள் என்பதால், விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு 2008-இல் பிறந்த மொத்தம் 21,295 தாவாஸ் உறுப்பினர்கள் இந்த RM1,500 நிதியுதவியைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் இளம் தலைமுறையினரை வலுப்படுத்துவதிலும், அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் துவங்க ஒரு நிலையான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதிலும் மாநில அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இத்திட்டம் நிரூபிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டுள்ளார்.







