மெக்சிகோ சிட்டி, ஜூலை 7 - வெனிசுலாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஜூன் 24 அன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் வெனிசுலாவின் கடலோர மாநிலமான லா குவைரா (La Guaira) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே இன்னும் ஆயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை என்பதால் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) மற்றும் அதன் பங்காளிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சில மீட்புக் குழுவினர் தொடர்ந்து களத்தில் முகாமிட்டுள்ள வேளையில், மருத்துவம் மற்றும் பொறியியல் துறை சார்ந்த சர்வதேச நிபுணத்துவக் குழுக்கள் வெனிசுலாவிற்கு வந்தவண்ணம் உள்ளன.
மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த சுமார் 17,000 மக்களுக்காக, விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு மையங்களில் குறைந்தது 79 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக OCHA மேலும் தெரிவித்துள்ளது.







