கோலாலம்பூர், ஜூலை 7 - மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை ஓட்டி, மரணத்தை ஏற்படுத்தும் விபத்துகளுக்குக் காரணமானவர்களின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதற்கும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என மலேசிய சமூகக் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு அமைப்பு (MCCC) வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய கடுமையான தண்டனைகள் வெறும் தண்டிப்பதற்காக மட்டுமல்லாமல், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டுவதை எவரும் எளிதாக எண்ணக் கூடாது என்ற பாடத்தை புகட்டவும் உதவும் என பகாங் மாநில MCCC தலைவர் டேனியல் கூ தெரிவித்துள்ளார்
அதோடு, விபத்துகள் அதிகம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் அதிகாரிகள் தங்களின் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் சாலை பாதுகாப்பு குறித்த கல்வி பிரச்சாரங்களை விரிவுபடுத்தவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியான அமலாக்கம், கடுமையான தண்டனை மற்றும் பொதுக் கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, மரண விபத்துகளைக் குறைப்பதோடு சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.







