மலேசியாவில் எல்லைப் பகுதி மாநிலங்களில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரிப்பு

14 ஜூன் 2026, 1:30 AM
மலேசியாவில் எல்லைப் பகுதி மாநிலங்களில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரிப்பு

கோலா நெருஸ், ஜூன் 14: கடந்த 2025ஆம் ஆண்டில் மலேசியாவின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் அல்லது எல்லைக் கோடுகளில் அமைந்துள்ள நான்கு மாநிலங்கள், நாட்டின் மிக உயர்ந்த போதைப்பொருள் பயன்பாட்டு விகிதத்தைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளன.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையின் (AADK) தடுப்புப் பிரிவின் இயக்குனர் சித்தி மரியாம் முர்சிடான் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கிளந்தான் மாநிலம் இதில் முதலிடத்தில் உள்ளது.

அங்கு ஒவ்வொரு 100,000 மக்கள் தொகையிலும் 1,105 பேர் போதைப்பொருள் அடிமைகளாகவும் அதன் பயன்பாட்டாளர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திரங்கானு மாநிலம் 997 நபர்களுடன் இரண்டாவது இடத்திலும், பெர்லிஸ் 970 நபர்களுடன் மூன்றாவது இடத்திலும், கெடா 965 நபர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

இந்த மாநிலங்களின் புவியியல் இருப்பிடம், உள்ளூர் சந்தைகளுக்குள் சட்டவிரோதப் போதைப்பொருள் விநியோகம் மிக எளிதாக ஊடுருவுவதற்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்றும், இதனால் போதைக்கு அடிமையானவர்கள் தடைசெய்யப்பட்டப் பொருட்களைச் சுலபமாகப் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

' Kuala Nerus Car Free Hour' திட்டம் மற்றும் மாநில அளவிலான 'Drug-Free Aspirations Tour 2026' ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த ஆண்டு முழுவதும் நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் அடிமைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் என மொத்தம் 191,832 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நான்கு எல்லை மாநிலங்களைத் தவிர, பகாங்கில் 100,000 மக்கள் தொகைக்கு 795 வழக்குகளும், பினாங்கில் 757 வழக்குகளும், மலாக்காவில் 659 வழக்குகளும், பேராக் மாநிலத்தில் 579 வழக்குகளும் பதிவாகி, ஒப்பீட்டளவில் அதிக போதைப்பொருள் புழக்கத்தைக் காட்டியுள்ளன.

இருப்பினும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த நிலவரமும் தற்போதைக்குக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் திரங்கானு துணைக் காவல்துறை கமிஷனர் எஸ்ஏசி சுஃபியான் சுலைமான் மற்றும் மாநில ஏஏடிகே இயக்குனர் அர்ஸ்மி அப்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய சித்தி மரியாம், 'போதைப்பொருள் இல்லாத லட்சியக் கிராமம்' (Drug-free aspirational village programme) என்ற முன்னோடித் திட்டத்திற்காகத் திரங்கானுவில் உள்ள இரு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கோலா திரங்கானுவில் உள்ள கம்போங் கோங் ராவாய் (Kampung Gong Rawai) மற்றும் மாராங்கில் உள்ள கம்போங் ராவாய் (Kampung Rawai) ஆகிய கிராமங்களே இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஏஏடிகே-வின் தடுப்புத் திட்டங்கள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கி வரும் சிறப்பான ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தக் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அர்த்தம், அங்கு அதிகளவில் போதைப்பொருள் அடிமைகள் இருக்கிறார்கள் என்பது அல்ல. மாறாக, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு அக்கிராமத்துத் தலைவர்களும் பொதுமக்களும் காட்டும் ஒத்துழைப்பையும் தயார் நிலையையும் பாராட்டுவதற்காக ஆகும்.

பிற மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்காக ஒரே ஒரு கிராமம் மட்டுமே தத்தெடுக்கப்பட்டுள்ள வேளையில், திரங்கானுவில் மட்டும் இரண்டு கிராமங்கள் இந்த முன்னோடித் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறப்புக்குரியது என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.