கோலாலம்பூர், ஜூலை 3 - சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்வதற்காக, ePlacement எனும் பணி வேலையிட முறையின், முதல் கட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சு 960 நிரந்தர மருத்துவ அதிகாரிகளை சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ளது.
சரவாக்கில் 650 மருத்துவ அதிகாரிகளும், சபாவில் 310 மருத்துவ அதிகாரிகளும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வேலைக்கு அமர்த்தப்பட்ட 2,248 மருத்துவ அதிகாரிகளில் அந்த எண்ணிக்கை 42.7 விழுக்காடாகும். தீபகற்ப மலேசியாவில் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை அதிகமாகுமென மக்களவைக்கு சுகாதார அமைச்சு வழங்கிய எழுத்துப் பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிரந்தரமான வேலை நியமனத்திற்கு , ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் மருத்துவ அதிகாரிகள் சபா அல்லது சரவாக்கில் வேலை செய்ய
வேண்டுமெனும் நிபந்தனை உள்ளது.
நாட்டில் மொத்தம் 4,500 நிரந்தர மருத்துவ அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டத்தின் கீழ், 328 மருத்துவ அதிகாரிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 29 ஆம் தேதி அவர்கள் அனைவரும் வேலையில் சேர்ந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.







