கோலாலம்பூர். ஜூன் 27 - சிலாங்கூர், சுபாங் பெஸ்தாரியில் செயல்பட்டு வந்த தனியார் கிளினிக்கிள் சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்து வந்த போலி மருத்துவரான பாகிஸ்தானிய ஆடவணை குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.
அந்நிய நாட்டவர்களை உட்படுத்திய சட்டவிரோத மருத்துவச் சேவையை முடக்கும் சிறப்பு நடவடிக்கையின் கீழ், புதன்கிழமை அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, குடிநுழைவுத் துறை அதன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டது.
தொடக்க விசாரணையில் கைதான அந்த பாகிஸ்தானிய ஆடவன் மலேசியாவில் தங்கியிருப்பதற்கான முறையான பயண ஆவணங்களை வைத்திருக்காதது தெரிய வந்தது.
அதோடு, மற்றுமோர் அந்நிய நாட்டவருக்குச் சொந்தமான தனியார் கிளினிக் அந்த போலி பாகிஸ்தானிய ஆடவனை வேலைக்கு அமர்த்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளையும், நோயாளிகளையும் ஏமாற்ற அந்த கிளினிக் வேறொரு நபரின் மருத்துவ தகுதி சான்றிதழ்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறது.
மேலும், மருத்துவ பரிசோதனைகள் எதையும் செய்யாமல் 20 ரிங்கிட்டிற்கு மருத்துவ சான்றிதழையும் வழங்கியுள்ளது.
அந்த கிளினிக் சட்டவிரோதமாக 8 மாதங்களாக இயங்கி வந்திருக்கிறது.







