ஜூலை 3 - ஆண்டுதோறும் ஒவ்வொரு அவாஸ் (AWAS) தானியங்கி கண்காணிப்பு காமிராவின் பராமரிப்புக்காக 1 லட்சத்து 12ஆயிரத்து 800 ரிங்கிட் செலவு செய்யப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
அக்காமிரா, தொடர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் செயல்பட பழுதுபார்ப்பு, உபரி பாகம் மற்றும் மேலும் இதர பராமரிப்புக்காக அந்த செலவு செய்யப்படுவதாக அமைச்சர் அந்தோணி லோக், மக்களவையில் எழுத்துப் பூர்வமாக வழங்கியப் பதிலில் தெரிவித்தார்.
இதனிடையே நாட்டில் அவாஸ் காமிராக்களின் கண்காணிப்பு முறை, வருவாயை ஈட்டுவதற்காக செயல்படுத்தப்படவில்லை.
மாறாக, சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் , சாலை போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதிச் செய்யவும் இந்த அவாஸ் முறை நாட்டில் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
நாட்டில் அவாஸ் காமிராக்களைப் பராமரிக்க ஒவ்வோராண்டும் பராமரிப்பு பணிகளுக்காகவும் , சாலை குற்றப் பதிவுகளை அச்சிடவும் மொத்தம் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் செலவு செய்யப்படுவதாக கடந்தாண்டு ஆகஸ்ட்-டில் அந்தோணி லோக் கூறியிருந்தார்.
அக்காமிராக்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இன்ஃபோமினா நிறுவனம் (Infomina Bhd) 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் 2 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் 3 ஆண்டுகால ஒப்பந்தத்தைப் பெற்றது.






