கோலாலம்பூர், ஜூலை 1: எந்தவொரு வங்கியின் தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம் (ATM) அல்லது ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரம் (SRM) மூலமாக பணம் எடுக்க 1 ரிங்கிட் கட்டண விலக்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டம் பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்க பெரிதும் உதவும் என இரண்டாம் நிதி அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ அமிருல் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
மலேசிய நிதி அமைச்சும் உள்நாட்டு வங்கிகளும் இணைந்து மேற்கொண்டுள்ள இம்முயற்சி, குறிப்பாக கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் நிலவும் ஏடிஎம் இயந்திரங்களின் பற்றாக்குறையைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வங்கிகள் இந்தச் செலவை ஏற்கும் திறன் கொண்டிருப்பதால், 1 ரிங்கிட் கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கம் வங்கிகளை ஊக்குவித்துள்ளது.
இந்த கட்டண விலக்கின் மூலம் மலேசிய டெபிட் கார்டு வைத்துள்ளவர்கள், நாடு முழுவதும் உள்ள 14,000க்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் எஸ்ஆர்எம் இயந்திரங்களை கட்டணமின்றி இலவசமாகப் பயன்படுத்திப் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.






