கோலாலம்பூர், ஜூன் 30: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மலேசியர்கள் இருவர் காயமடைந்திருக்கும் நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என வெளியுறவு அமைச்சு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை உடனடியாக வழங்குவதற்கும், உண்மை நிலவரங்களைத் துல்லியமாகத் திரட்டுவதற்கும் அங்குள்ள மலேசியத் தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தற்பொழுது தீவிரத் தொடர்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள், கிளந்தானைச் சேர்ந்த 45 வயதுடைய அப்துல்லா ஷராபி அப்துல் ரஹ்மான் மற்றும் சாபாவைச் சேர்ந்த 38 வயதுடைய முகமட் யுஸ்ரீ உடின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் அல்லது அங்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியப் பிரஜைகள் அனைவரும் எப்போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் தூதரக உதவிகளை மிக விரைவாகப் பெறுவதற்கு மலேசியர்கள் அனைவரும் 'இ-கொன்சுலார்' (e-Konsular) இணையப்பக்கம் வாயிலாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து, தொடர்பு எண்களைத் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் அவசர உதவி தேவைப்படின், சோங்க்லாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை வாட்ஸ்அப் எண்கள் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.







