புத்ராஜெயா, 13 ஜூலை – தாய்லாந்து, பேங்காக் நகரில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ள வேளையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் மலேசியர்கள் யாரும் இல்லை என்பதை விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சு) உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசியர்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஏதேனும் கிடைத்தால், அமைச்சு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் புதிய விபரங்களை வெளியிடும் என்றும் விஸ்மா புத்ரா தெரிவித்தது.
பேங்காகில் வசிக்கும் அல்லது அங்கு தங்கியிருக்கும் மலேசியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், தங்களின் சுய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதோடு உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்கும் அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புகளையும் அவசர தூதரக உதவிகளையும் விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக, பேங்காகில் உள்ள மலேசியர்கள் https://ekonsular.kln.gov.my என்ற இணையப்பக்கத்தின் வழி தங்களின் விபரங்களை இ-கொன்சுலார் (e-Konsular) அமைப்பில் பதிவு செய்து, புதுப்பித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் அவசர உதவி அல்லது தூதரக ஆதரவு தேவைப்படும் மலேசியர்கள், பேங்காகில் உள்ள மலேசிய தூதரகத்தை +66 2 340 5720 என்ற தொலைபேசி எண் அல்லது mwbangkok@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.







