ஷா ஆலாம், ஜூன் 28 - ஷா ஆலாம் 3 எல்.ஆர்.டி நிலையங்களின் நெடுகிலும் உள்ள பிராசாரானா (Prasarana) நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள், சிறு வர்த்தகர்களுக்கான கடைகள், கார் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றைக் கட்டித் தருவது அந்த திட்டங்களில் அடங்குமென்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அத்திட்டங்களை விரைவுப்படுத்த போக்குவரத்து மற்றும் நிதியமைச்சின் தலைமை செயலாளர்களைத் தாம் பணித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் வழி பயணச் செலவைக் குறைத்து மேலும் அதிகமானோர் பொது போக்குவரத்துச் சேவையின் மூலம் பயனடையச் செய்ய முடியுமென, ஜொஹான் செத்தியாவில் ஷா ஆலாமுக்கான எல்ஆர்டி 3 சேவையை தொடக்கி வைத்தப் பின்னர் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.






