கிள்ளான்,ஜூன் 28 - புதிதாக திறக்கப்பட்டுள்ள ஷா ஆலாம் எல்ஆர்டி 3 ரயில் மற்றும் ஃபீடர் ( Feeder ) பேருந்து சேவையை, பொது மக்கள் நாளை தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ஜொஹன் செத்தியா எல்ஆர்டி நிலையப் பகுதியில் ஷா ஆலாமுக்கான எல்ஆர்டி ரயில் சேவையைத் தொடக்கி வைத்த போது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பினைச் செய்தார்.
பொது மக்கள் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
பொது போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், சாலையில் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, பயண நேரத்தையும் எரிபொருள் பயன்பாட்டினையும் மிச்சப்படுத்த முடியும். அதோடு கார்பன் வாயு வெளியீட்டையும் குறைக்க முடியுமென அன்வார் குறிப்பிட்டார்.
பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹன் செத்தியா வரையில் 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட ஷா ஆலாமுக்கான எல்.ஆர்.டி 3 (LRT3) ரயில் சேவை, மொத்தம் 20 நிலையங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த ஷா ஆலாம் இணைப்பு (Shah Alam Line), பண்டார் உத்தாமா நிலையத்தில் காஜாங் இணைப்பையும் ( Kajang Line), கிளென்மெரி 2 நிலையத்தில் கிளானா ஜயா இணைப்பையும் ( Kelana Jaya Line ) இணைக்கின்றது.
ஷா ஆலாம் எல்.ஆர்.டி 3 நிலையங்கள் நெடுகே , 323 இடங்களில் நிற்கும் ஒரு ரிங்கிட் கட்டணத்தில் இயங்கும் 40 ஃபீடர் பேருந்துகளின் சேவை, காலை மணி 6 தொடங்கி இரவு மணி 11.30 வரை செயல்படும். தற்போதைக்கு மக்கள் ஒரு மாதத்திற்கு இச்சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இரண்டு ரிங்கிட் கட்டணத்தில் வேன் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.







