சிப்பாங், ஜூன் 18 - ஏர் ஏசியா (AirAsia) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புப் பக்கத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்டுச் செயல்படும் இணையத்தளங்கள் குறித்து வேலை தேடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஏர் ஏசியா நிறுவனத்தின் பெயரில் போலியான வேலைவாய்ப்பு இணையத்தளம் ஒன்று பொதுமக்களை இலக்காகக் கொண்டு இயங்கி வருவதாக ஏர் ஏசியா நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அந்தப் போலி இணையத்தளம், ஏர் ஏசியாவின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புப் பக்கத்தைப் போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வேலைக்கு விண்ணப்பிப்போரின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பதோடு, போலியான வேலைவாய்ப்புச் செயல்முறைகளைத் தொடர்வதற்கு ஏதுவாக 'செயலாக்கக் கட்டணம்' (Processing Fee) என்ற பெயரில் பணத்தையும் மோசடிப் பேர்வழிகள் கோரி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையத்தள முகவரி http://careers.airasia.com ஆகும். வேலை விண்ணப்பங்களுக்காகத் தங்கள் நிறுவனம் எப்போதும் எவ்விதக் கட்டணத்தையும் வசூலிப்பது கிடையாது என்றும் ஏர் ஏசியா மிகத் தெளிவாக விளக்கியுள்ளது.
எனவே, வேலை தேடுபவர்கள் இத்தகைய அங்கீகரிக்கப்படாத போலி இணையத்தளங்களில் தங்களின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களையோ பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களை ஏமாற்றும் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தங்களின் நிறுவனம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வேலைவாய்ப்புத் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் ஏர் ஏசியாவின் அதிகாரப்பூர்வ ஊடகக் கட்டுப்பாட்டுப் பக்கங்களின் வாயிலாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.







