ஷா ஆலம், ஜூன் 26: சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களின் அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக மாநில அரசு 160 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதாக மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவிகள் உண்மையாகவே ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், 'பிளான் பந்துவான் கெஹிடுப்பான் செஜஹ்தாரா சிலாங்கூர்' (Bantuan Kehidupan Sejahtera Selangor), 'மெஸ்ரா ஊசியா எமாஸ்' (Mesra Usia Emas) முதியோர் திட்டம் மற்றும் 'மாமாகெர்ஜா' (MamaKerja) போன்ற திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவற்றுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான 'பந்துவான் ரஹ்மா இன்சான் இஸ்திமேவா' (Bantuan Rahmah Insan Istimewa), பராமரிப்பு உபகரணங்களுக்கான உதவி மற்றும் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களும் இந்த நிதியின் மூலம் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
சிலாங்கூரில் 18,146 ஏழைக் குடும்பத் தலைவர்கள் பதிவாகியுள்ளனர். இருப்பினும், தற்போதைய பொருளாதாரச் சவால்கள் ஒற்றைத் தாய்மார்கள், வேலை இழந்தவர்கள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வை எதிர்கொள்ளும் நடுத்தரக் குடும்பங்கள் போன்ற பல குழுக்களையும் பாதித்துள்ளது.
இதன் காரணமாக, பதிவுசெய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக, சுமார் 50,000 பயனாளிகளுக்கு உதவும் வகையில் 'கித்தா சிலாங்கூர் வவுச்சர்' (BKS) திட்டத்தின் மூலம் சிலாங்கூர் அரசு மிகவும் விரிவான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
புள்ளிவிவரங்கள் வெறும் எண்களாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அன்றாடம் போராடும் பல குடும்பங்கள் உள்ளன என்பதைச் அன்ஃபால் சாரி சுட்டிக்காட்டினார்.
இந்த 'கித்தா சிலாங்கூர் வவுச்சர்' (BKS) திட்டம் என்பது ஒரு குறுகிய கால உதவி மட்டுமல்லாமல், தற்போதைய பொருளாதாரப் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் அதிகமான மக்களுக்குப் பக்கபலமாக இருக்கும் மாநில அரசின் உடனடித் திட்டமாகும் என்றார்.






