கோலாலம்பூர், ஜூன் 25: ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறுவர் உரிமைகளுக்கான குழுவின் (CRC) உறுப்பினராக 2027 முதல் 2031 ஆம் ஆண்டு வரையிலான தவணைக்கு டத்தோ யாஸ்மீன் முகமட் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
உலக அரங்கில் மலேசியாவின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த சாதனை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் தனது முகநூல் (Facebook) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சாதனை மலேசியாவின் சர்வதேச அளவிலான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், நாட்டின் கண்ணியத்தை உலக அரங்கில் உயர்த்துவதற்கும், எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளைப் படைப்பதற்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
நேற்று, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளின் 21-ஆவது கூட்டத்தில், கலந்து கொண்ட 189 உறுப்பு நாடுகளில் 136 நாடுகளின் ஆதரவு வாக்குகளைப் பெற்று டத்தோ யாஸ்மீன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்திருந்தது.
ஏற்கனவே 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான தவணைக்காலத்திலும் இக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமிக்கவரான டத்தோ யாஸ்மீன், இம்முறை நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே மிக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







