பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23 – நாட்டில் வாகனப் பரிசோதனைச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை ஈடுசெய்யும் வகையிலும், சாலைப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், இந்த ஆண்டில் நாடு தழுவிய அளவில் 100 புதிய வாகனப் பரிசோதனை அதிகாரிகளை (Vehicle Examiners) வேலைக்கு அமர்த்த புஸ்பாகோம் (Puspakom) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கூடுதல் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுவதோடு சேவைத் திறன் மேம்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் விதிமுறை இணக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், புதிய வாகனப் பரிசோதனை முயற்சிகளுக்கு இந்த கூடுதல் பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மனித வளம், பாதுகாப்பு மற்றும் சேவைத் தரத்தில் முதலீடு செய்வதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த வேலைவாய்ப்பு நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று புஸ்பாகோம் தலைமை நிர்வாக அதிகாரி மஹ்மூட் ரசாக் பஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த 100 புதிய அதிகாரிகள் மூலமாக மலேசியர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் கடுமையான பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் தங்களின் முக்கிய நோக்கமும் வலுவடையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.







