ஷா ஆலம், ஜூன் 22 - ஷா ஆலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் எல்.ஆர்.டி 3 (LRT3) இலகு ரயில் சேவை எதிர்வரும் ஜூன் 29ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ரயில் பாதையைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜூன் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் முதல் பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்தலாம் என அந்தோணி கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த மிக முக்கியப் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களில் இந்த எல்.ஆர்.டி 3 திட்டமும் ஒன்றாகும்.
37.8 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டுள்ள இந்த புதிய ரயில் பாதை, பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவையும், கிள்ளானின் ஜோஹான் செத்தியாவையும் இணைப்பதுடன், ஷா ஆலம் உட்படப் பல முக்கியப் பகுதிகள் வழியாகக் கடந்து செல்கிறது.
இச்சேவையின் தொடக்கமானது இப்பகுதி மக்களுக்கு விரிவான போக்குவரத்து வசதிகளை வழங்குவதோடு, தற்போதுள்ள நகர்ப்புற ரயில் போக்குவரத்து அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.







