ஷா ஆலம், ஜூன் 22 - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிப் பகுதி வாழ் மக்கள் தங்களின் அன்றாட நகராட்சி சார்ந்த தேவைகளை மிக விரைவாகவும், எளிதாகவும், திறம்படவும் அணுகும் வகையில் 32 இணயச் சேவைகள் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பெட்டாலிங் ஜெயா மாநகரத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநகர மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி சமிங்கோன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த புதிய மின்னணு சேவைகளின் கீழ், சொத்து வரி செலுத்துதல், திட்டமிடல் மற்றும் கட்டிடக் கட்டுப்பாடு, உரிமங்கள் மற்றும் அனுமதிகள் பெறுதல், பொது வசதிகள் மற்றும் சொத்து தொடர்பான விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் இணையம் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தகைய டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களின் வழி, நகராட்சியின் சேவைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி எப்போதும் உறுதியுடன் இருப்பதாக மேயர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம் என்பது வெறும் நவீனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது பொதுமக்களின் நல்வாழ்விற்கும், நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
வீடமைப்பு மற்றும் கலாச்சாரத்துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த இந்த 20ஆம் ஆண்டு நிறைவு விழா, 'பிஜே: மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நிலையான நகரம்' (PJ: The Happiest and Most Sustainable City) என்ற கருப்பொருளின் கீழ் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.







