கோத்தா பாரு, ஜூன் 21: தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 1 லட்சத்து 99 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 1,990 மின்னணு புகையிலை (வேப்) கருவிகளை பொது நடவடிக்கைப் படை (PGA) பறிமுதல் செய்தது.
ரந்தாவ் பாஞ்சாங் சுங்கத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் தாரிங் வாவாசான்’ (OPS Taring Wawasan) நடவடிக்கையின் மூலமாக, அந்த பறிமுதல் செய்யப்பட்டதாக தெங்காரா (Tenggara) பிரிகேட் தளபதி எஸ்.ஏ.சி. அஹ்மாட் ராட்ஸி ஹுசைன் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியான சுங்கை கோலோக் ஆற்றைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், தெபு சட்டவிரோத தளத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வைக்கப்பட்டிருந்த பழுப்பு நிறப் பெட்டிகளை கண்டெடுத்தனர்.
மொத்தம் ஒன்பது பெட்டிகளில் பல்வேறு சுவையிலான வேப் போட் கருவிகள் இருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்று அஹ்மாட் ராட்ஸி அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.






