பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19: இன்று அதிகாலை கிள்ளான், தாமான் ஸ்ரீ இஸ்தானா ஹில்ஸ் (Taman Sri Istana Hills) பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை தீக்காயமடைந்ததுடன், அவரது மகன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார்.
அதிகாலை சுமார் 5:23 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 57 வயதுடைய தந்தையும் 28 வயதுடைய அவரது மகனும் பாதிக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் அந்த வீட்டின் சுமார் 70 விழுக்காடு பகுதி எரிந்து சேதமடைந்தது.
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசால் அஸ்பார் கூறுகையில், கிள்ளான் செலாத்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
"தீ விபத்து காலை 5:47 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பாதிக்கப்பட்ட இருவரில், தந்தைக்குச் சுமார் 10 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. மகன் புகையைச் சுவாசித்ததால் மூச்சுத்திணறலுக்கு ஆளானார்," என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இருவருக்கும் சம்பவ இடத்திலேயே முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் தீயணைப்புத் துறையின் அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) வாகனம் மூலம் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் (HTAR) கொண்டு செல்லப்பட்டனர்.







