ஷா ஆலம், ஜூன் 19: சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த பல்கலைக்கழக மாணவர்கள், மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் துறைகளில் தங்களது உயர்கல்வியைத் தொடர்வதற்கு (Biasiswa Pendidikan Kita Selangor) திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 17 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது.
நிதி நெருக்கடிகள் காரணமாகத் தகுதியும் திறமையுமுள்ள சிலாங்கூர் மாநில மாணவர்கள் எவரும் தங்களின் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போய்விடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் மின்னணுவியல், வாழ்க்கை அறிவியல் (Life Sciences), செயற்கை நுண்ணறிவு (AI), பொறியியல் மற்றும் தானியங்கி (Automation) உள்ளிட்ட நவீனத் துறைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரச் சவால்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைத் தைரியமாக எதிர்கொள்வதற்கும், தனிமனிதர்களின் வாய்ப்புகளையும் பின்னடைவைத் தாங்கும் திறனை மேம்படுத்துவதற்கும் கல்வி மிக முக்கியப் பங்காற்றுகிறது என்று அவர் விவரித்தார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளின் தாக்கம், ஒரு தனிமனிதன் சவால்களை எதிர்கொள்வதற்குக் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், கல்வி கற்கும் ஆற்றலும் ஆர்வமும் கொண்ட சிலாங்கூர் பிள்ளைகள், நிதிப் பற்றாக்குறை என்ற ஒரே காரணத்திற்காக முடக்கப்படுவதை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
சிலாங்கூர் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் நோக்கில், இந்த 17 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசுக்குச் சொந்தமான சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (UIS) ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு செமஸ்டருக்கும் (Semester) 500 ரிங்கிட் வழங்கும் 'பல்கலைக்கழக அடிப்படைக் கட்டண உதவி' (BAYU) திட்டத்தையும் மாநில அரசு தொடர்ந்து வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி யுனிசெல் பெஸ்தாரி ஜெயா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மில்லியன் ரிங்கிட்டிற்கான மாதிரிச் காசோலையை மந்திரி பெசார் மாணவர்களிடம் ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, மாநில அரசுக்குச் சொந்தமான உயர்கல்வி நிறுவனங்களின் கீழ் பயிலும் மாணவர்களின் கல்விச் சலுகைகளுக்காக, 2026-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 17.38 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு கல்விக்கட்டண மானியமாக (Subsidi Yuran Pendidikan) வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.







