ஷா ஆலம், ஜூன் 14 — டெங்கில், ஜெந்திராம் ஹிலிர் லோரோங் பஹாகியா பகுதியில் உள்ள புக்கிட் துங்குல் மலைப்பகுதியில் இன்று காலை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் திடீரென வழிதவறி காட்டில் சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஹரியான் மெட்ரோ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் பேசுகையில், இன்று காலை 10.13 மணியளவில் இந்த அவசரச் சம்பவம் குறித்து தங்களுக்கு அறிக்கை கிடைத்ததாகத் தெரிவித்தார்.
அதனையடுத்து, டெங்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வழிதவறி காட்டில் சிக்கிய அந்த நான்கு பெண்களும் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. மலையேற்ற நடவடிக்கையின் போது அவர்கள் பாதையைத் தவறவிட்டுள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுடன் மீட்புக் குழுவினரால் தொலைபேசி வழி தொடர்பை ஏற்படுத்த முடிந்தது.
இந்தத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முகமது சகிரின் செலாமாட் தலைமையிலான ஆறு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
தற்போது, அந்த நான்கு பெண்களையும் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.







