ஷா ஆலம், ஜூன் 13: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகள் மற்றும் கோலாலம்பூரில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அண்மைத் தகவலின்படி, சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடியப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தலைநகர் கோலாலம்பூர் மட்டுமின்றி, பெர்லிஸ், கெடா, பேராக், பகாங், ஜோகூர், சரவாக், சபா மற்றும் லபுவான் கூட்டரசு பிரதேசம் ஆகியவற்றின் சில பகுதிகளுக்கும் இதே போன்ற மோசமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிர மழைப்பொழிவு பதிவாகும்போது அல்லது பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது மட்டுமே இத்தகைய இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
இந்த எச்சரிக்கையானது குறுகிய காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பாகும். இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களின் பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







