புக்கிட் அந்தாராபங்சா: புதிய பள்ளி கட்டுமானத் திட்டம் விரைவில் டெண்டர் நிலைக்கு நகரும்

11 ஜூன் 2026, 8:14 AM
புக்கிட் அந்தாராபங்சா: புதிய பள்ளி கட்டுமானத் திட்டம் விரைவில் டெண்டர் நிலைக்கு நகரும்

ஷா ஆலம், ஜூன் 11: புக்கிட் அந்தாராபங்சா (Bukit Antarabangsa) வட்டார மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதிய பள்ளி கட்டுமானத் திட்டம், இந்த மாதத்தில் புதிய திட்டமிடல் அனுமதி (Planning Permission) பெறப்பட்டவுடன் மிக விரைவில் டெண்டர் நிலைக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) புதிய திட்டமிடல் அனுமதி விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கோரியதால், கட்டுமானப் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் காம்ரி கமாருடின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மீடியா சிலாங்கூரிடம் பேசிய அவர், இதற்கான நடைமுறைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும், முந்தைய திட்டமிடல் அனுமதியை மறுசமர்ப்பீடு செய்ய நகராண்மைக்கழகம் கேட்டுக்கொண்டதால் மட்டுமே இந்த சிறிய தாமதம் ஏற்பட்டது என்றும் விளக்கினார்.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இம்முறை இந்த அனுமதி வழங்கும் நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும் என்று நகராண்மைக் கழகம் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்தும் திட்டமிட்டபடி சுமூகமாக நடந்தால், புதிய திட்டமிடல் அனுமதி இந்த ஜூன் மாதத்திற்குள் பெறப்பட்டு, அதற்கான டெண்டர் செயல்முறைகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இத்திட்டம் அமையவிருக்கும் நிலம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுவிட்டதாக முகமட் காம்ரி தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தின் ஒரு பகுதி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குச் சொந்தமானதாக இருந்த நிலையில், ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை மூலம் நில உரிமை மற்றும் நில அந்தஸ்து தொடர்பான அனைத்து தடைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன.

இதனால் திட்டமிடப்பட்ட பள்ளி தளம் எவ்வித மாற்றமுமின்றி அதே இடத்தில் அமையவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டக் குறைப்புகளால் இத்திட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும், இது அரசாங்கத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்பதற்கான உறுதிப்பாட்டைத் தாம் பெற்றுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

புக்கிட் அந்தாராபங்சா மற்றும் உகாய் பெர்டானா (Ukay Perdana) ஆகிய பகுதிகள் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்த போதிலும், அங்கு இன்னும் ஒரு பள்ளி கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய காம்ரி, இக்கட்டுமானப் பணிகள் கூடிய விரைவில் தொடங்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

உள்ளூரில் பள்ளி இல்லாததால், இப்பகுதி மாணவர்கள் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவே குறிப்பாக வேலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.

இப்பகுதியில் தற்போது வசிக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 75,000-ஐ எட்டியுள்ள போதிலும், தங்களுக்கு என ஒரு பள்ளி இன்னும் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்ய இக்கல்வி வசதி மிகவும் அவசியமாகும்.

இது இப்பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு உள்ளூர் மாணவர்கள் எளிதாகக் கல்வியைப் பெற வழிவகுக்கும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் முகமட் காம்ரி கமாருடின் வலியுறுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.