ஷா ஆலம், ஜூன் 9: இன்று காலை உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங்கில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை 8.25 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் (JBPM) உதவி நடவடிக்கை இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
இந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கடை வளாகத்தின் படிக்கட்டுப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தீப்பிடித்திருப்பதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நான்கு பெருக்கல் பத்து சதுர அடி பரப்பளவிலான அந்தப் படிக்கட்டுப் பகுதியில் இருந்த குவியல்கள் சுமார் 80 விழுக்காடு தீயினால் நாசமடைந்த போதிலும், கட்டிடத்தின் பிற பகுதிகளுக்குத் தீ பரவவில்லை என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த அந்த ஆடவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. எனினும் மேல் பரிசோதனைக்காக அவர் சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என அகமட் முக்லிஸ் கூறினார்.
தீயணைப்பு மூத்த அதிகாரி முகமட் சியுஹைசால் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கை, காலை 8.40 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து நிறைவு பெற்றது.







