ஜகார்த்தா, ஜூன் 8 – பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் வடக்குக் கடலோரப் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை (BMKG) அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
சுனாமி அலைகளின் அச்சுறுத்தல் காரணமாகக் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுச் சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்தின் தற்போதைய நிலைத்தன்மை குறித்து நடத்தப்பட்ட தொடர் கண்காணிப்புகளுக்குப் பிறகு, கடல் அலைகள் மீண்டும் தங்களின் இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து இந்தச் சுனாமி எச்சரிக்கை நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக முகமை விளக்கியுள்ளது.
இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில், இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சில கடலோரக் கண்காணிப்பு நிலையங்களில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் (minor tsunami waves) பதிவாகியிருந்ததை BMKG உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட அதபயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தோனேசியாவின் வடகிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் நிலவியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழும் 'நெருப்பு வளைய' (Ring of Fire) பகுதியில் இந்தோனேசியாவும் அதன் அண்டை நாடான பிலிப்பைன்ஸும் அமைந்திருப்பதால், இவ்விரு நாடுகளும் தொடர்ந்து இத்தகைய புவி அதிர்வுகளை எதிர்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.







