கோலாலம்பூர், ஜூன் 7 – இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் தணிக்கையற்ற இணையப் பக்கங்களின் ஊடுருவல்களிலிருந்தும், சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்தும் நாட்டின் இளம் தலைமுறையினரை அரணாக நின்று பாதுகாக்க ‘வாசிப்புப் பழக்கம்’ மட்டுமே முதன்மையான ஆயுதமாக திகழ முடியும் என்று மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஃபரீட் முகமட் அஷாரி வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஹார்ட் அண்ட் மைண்ட்: லீடர்ஸ் எடிஷன்’ எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கம் பெருமளவில் குறைந்து வருவதாக கவலை தெரிவித்தார்.
அதே வேளையில், அவர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தைச் சமூக ஊடகங்களில், குறிப்பாக 'டூம்ஸ்க்ரோலிங்' (doomscrolling) எனப்படும் எதிர்மறையான பதிவுகளைத் தேடிப் படிப்பதிலேயே வீணடிப்பதால், அவர்களின் கவனம் செலுத்தும் திறன் மற்றும் பொறுமை ஆகியவை வெகுவாகக் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வைச் சுட்டிக்காட்டிய முகமது ஃபரீட், அங்குள்ள மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவிடும் வேளையில், வெறும் ஏழு நிமிடங்களை மட்டுமே புத்தக வாசிப்பிற்காக ஒதுக்குகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
உலகளாவிய ரீதியில் பரவி வரும் இத்தகைய ஆபத்தான போக்கு, ஒரு தனிமனிதனின் மனநலனைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இளம் பிள்ளைகளின் மன மற்றும் சமூக ரீதியிலான வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மிகவும் பொருத்தமானது மற்றும் வரவேற்கத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், சிறு வயது முதலே பிள்ளைகளிடையே வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்று குறிப்பிட்ட முகமட் ஃபரீட், பெற்றோர்கள் தங்களின் பொன்னான நேரத்தைப் பிள்ளைகளுடன் இணைந்து புத்தகங்கள் வாசிப்பதில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல், தங்களின் பிள்ளைகள் கல்வியில் சாதனை படைக்கும் போது அவர்களுக்குப் பரிசுப் பொருட்களாகப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போதைய பள்ளி விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இம்முறை கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்குத் திரளான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்த வண்ணம் உள்ளதால், இவ்வாண்டின் கண்காட்சி வழக்கத்தை விடவும் மிகுந்த கோலாகலத்துடன் காணப்படுவதாக முகமட் ஃபரீட் தெரிவித்தார்.







