ஷா ஆலம், ஜூன் 5: சுபாங் ஜெயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், நாளை தங்களின் பகுதியில் நடைபெறவுள்ள 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) இலவச மருத்துவப் பரிசோதனை முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(Siri Jelajah Wanita Berdaya Tahan Selangor 2026) விழிப்புணர்வுப் பயணத் திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்படும் இந்த இலவச மருத்துவ முகாம், நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுபாங் ஜெயா, SS15/4-இல் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் (Dewan Serbaguna SS15/4) நடைபெறவுள்ளது என்று பொதுச் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள், தங்களுக்குத் தொற்றா நோய்களான (NCD) இதய நோய், நீரிழிவு (சர்க்கரை நோய்), உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளை முற்றிலும் இலவசமாகச் செய்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பெருங்குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் கண்டறிதல் சோதனைகளும் இந்த முகாமில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், கண் பார்வைத் குறைபாடு மற்றும் குளுக்கோமா (Glaucoma) போன்ற கண் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைகளுடன், பல் பரிசோதனை, பிசியோதெரபி மற்றும் காது தொடர்பான கூடுதல் பரிசோதனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன என்று அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இங்கு வழங்கப்படும் மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும், பொதுமக்கள் 'செலாங்கா' (SELangkah) செயலியில் பூர்த்தி செய்யும் ஆரம்பக்கட்டத் தகுதிநிலை மற்றும் தனிநபர் ஆரோக்கியப் பின்னணியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று ஜமாலியா விளக்கமளித்தார்.
எனவே, பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து பாதுகாப்பைப் பெறுவதோடு, தங்களின் பரிசோதனை நடைமுறைகளை எளிதாக்கிக் கொள்ள 'செலாங்கா' செயலி வழியாக முன்கூட்டியே தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பொதுமக்கள் 1-800-22-6600 என்ற (Selcare) அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.









