பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை விரைவில் கட்டப்படும்

27 மே 2026, 7:28 AM
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை விரைவில் கட்டப்படும்

ஷா ஆலம், மே 27 - பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் பூச்சோங் ஆகியப் பகுதிகளில் உள்ள மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 500 படுக்கைகள் கொண்ட பெட்டாலிங் ஜெயா அரசு மருத்துவமனையைக் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட நிலத்திற்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் மலேசியச் சுகாதார அமைச்சும் (KKM) ஒப்புதல் அளித்துள்ளன.

கடந்த மே 14-ஆம் தேதி மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"குறிப்பாக மருத்துவமனை கட்டுமானம் மற்றும் அதன் செயல்பாடுகள் என பொதுச் சுகாதாரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பை இந்த அறிவிப்பு காட்டுகிறது," என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா பகுதியில் மட்டும் சுமார் 800,000 மக்கள் உட்பட பெட்டாலிங் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 2.3 மில்லியனை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, இங்கு அரசு மருத்துவமனை அமைப்பதற்கான பொருத்தமான இடத்தைத் தேடும் முயற்சிகள் 2018 முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

தற்போது, இப்பகுதி மக்கள் சுங்கை பூலோ மருத்துவமனை, ஷா ஆலம் மருத்துவமனை மற்றும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (PPUM) ஆகியவற்றையே நம்பியுள்ளனர். அதிக மக்கள்தொகை காரணமாக இந்த மருத்துவமனைகள் இடப்பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைக்கான அணுகல், கொள்ளளவு, நிலத்தின் விலை மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் அமைந்திருப்பது ஆகிய பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்த இந்த இடம் பொருத்தமானதாகக் காணப்படுவதாக அமிருடின் கூறினார்.

அம்பாங் மருத்துவமனையைப் போன்று செங்குத்தான (vertical) அமைப்பைப் பயன்படுத்தி 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இந்த இடத்தில் கட்ட முடியும் என்றும், இதன் மூலம் நிலப் பயன்பாடு மற்றும் கட்டுமானச் செலவை உகந்த முறையில் கையாளலாம் என்றும் அவர் விளக்கினார்.

சிலாங்கூரில் பொது சுகாதார அணுகலை மேம்படுத்தும் நோக்கில் சைபர்ஜெயா மருத்துவமனை, தஞ்சோங் காராங் மருத்துவமனை மற்றும் காப்பார் மருத்துவமனை ஆகியவற்றின் மேம்பாட்டிலும் மாநில அரசாங்கம் இதற்கு முன்னர் சுகாதார அமைச்சோடு இணைந்து செயல்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

"பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் பூச்சோங் மக்களின் நலனுக்காகச் சுகாதார அமைச்சு மருத்துவமனையைக் கட்டுவதற்கு வசதியாக, நிலம் தொடர்பான விவகாரங்களை எளிதாக்கவும் துரிதப்படுத்தவும் மாநில அரசாங்கம் தயாராக உள்ளது," என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் அரசு மருத்துவமனையைக் கட்டும் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அப்பகுதி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இப்பிரச்சனை அண்மையில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இதற்கு முன்பு, பழைய கிள்ளான் சாலைக்கு (Jalan Klang Lama) அருகே உள்ள தனியார் நிலத்தைக் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்டத் திட்டத்தை அதன் அதிக செலவு காரணமாக ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறியிருந்தார்.

நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதியான மருத்துவமனையை அமைக்க அமைச்சு விரும்புவதால், செலவுகளைக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

"ஆனாலும், செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில் இந்த மருத்துவமனையைத் தொலைதூர இடத்திற்கு மாற்றும் குறுக்குவழியை சுகாதார அமைச்சு கையாளாது."

"மக்களின் நலனும் வசதியுமே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக எப்போதும் இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.