சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி, அவரது மனைவி உயிரிழப்பு; நான்கு பிள்ளைகள் காயம்

27 மே 2026, 4:55 AM
சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி, அவரது மனைவி உயிரிழப்பு; நான்கு பிள்ளைகள் காயம்

குவாந்தான், மே 27: இன்று அதிகாலை பெக்கான், குவாந்தான்-சிகாமட் சாலையின் 76-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர். மேலும், அவர்களது நான்கு பிள்ளைகள் காயமடைந்தனர்.

குவாந்தான் மாவட்ட காவல் நிலையத் தலைமையகத்தில் (IPD) பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஷா லோக்மான் லுட்ஸா ராம்லி (50) மற்றும் அவரது மனைவி நூருல்ஃபிஸா அர்டியானா அம்பாக் (46) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெக்கான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் முகமட் ஸைடி மாட் ஸின் தெரிவித்தார்.

குவாந்தானிலிருந்து நெகிரி செம்பிலான், ஜெம்போலை நோக்கிப் பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் வீரா காரும், ஜோகூர், கெலாங் பாத்தாவிலிருந்து திரெங்கானுவை நோக்கி 26 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி காரும் மோதிக் கொண்ட இவ்விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

"சம்பவ இடத்தில், புரோட்டோன் வீரா கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் நுழைந்து ஹோண்டா சிட்டி காருடன் மோதியதாகக் கருதப்படுகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

ஷா லோக்மான் - நூருல்ஃபிஸா தம்பதியரின் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு இடது கால் முறிந்துள்ளது. அவர்கள் அனைவரும் ரொம்பின், முவாட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ஹோண்டா சிட்டி காரின் ஓட்டுநரும் இலேசான காயங்களுக்கு உள்ளானார். கர்ப்பிணியான அவரது 26 வயது மனைவியும் அதே மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த தம்பதியரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் பெக்கான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பரிசோதனை இன்று காலை நடைபெறும் என்றும் முகமட் ஸைடி கூறினார்.

இந்த வழக்கு 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப்
பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.