காவல் துறையினரை காரால் மோத முயன்ற மூவர் கைது

25 மே 2026, 2:57 AM
காவல் துறையினரை காரால் மோத முயன்ற மூவர் கைது

கோலாலம்பூர், மே 25: நேற்று உலு லங்காட், டூசுன் துவா, ஜாலான் பத்து 15 1/4-இல் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க காவல் துறையினரை காரால் மோத முயன்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது, சந்தேக நபர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தல் ஏற் பட்டதால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. தம்பின் மாவட்டக் காவல் தலைமையகத்தில் (IPD) விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்குத் தொடர்பாக, அத்தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல் துறையினர் சந்தேக நபர்களைக் கைது செய்ய முயன்றனர் என்று அவர் கூறினார்.

எனினும், போலிப் பதிவு எண் கொண்ட வாகனத்தில் தப்ப முயன்ற அனைத்து சந்தேக நபர்களையும் காவல்துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்ததாக நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

"முதல் சந்தேக நபருக்கு ஆறு குற்றப் பதிவுகளும் மூன்று போதைப்பொருள் பதிவுகளும், இரண்டாவது நபருக்கு நான்கு குற்றப் பதிவுகளும் 11 போதைப்பொருள் பதிவுகளும், மூன்றாவது நபருக்கு ஆறு குற்றப் பதிவுகளும் இரண்டு போதைப்பொருள் பதிவுகளும் உள்ளன," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கொலை முயற்சி மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகியவற்றுக்காக குற்றவியல் சட்டம் பிரிவு 307 மற்றும் பிரிவு 186 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை செராஸ், ரசாக் சிட்டி ரெசிடென்சியில் உள்ள ஒரு மினி மார்க்கெட் முன்பு பாதுகாப்புக் காவலாளி மேற்பார்வையாளரை கத்தியால் தாக்கி காயப்படுத்திய 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

காலை 9 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து செராஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்டி டாவுட் தனியாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்பகுதியில் மது அருந்திவிட்டு, மதுபானக் குப்பியை கண்டபடி வீசிய சிறுவனை 49 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர் கண்டித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

அந்தக் கண்டிப்பால் அதிருப்தியடைந்த சிறுவன், ஆக்ரோஷமாகச் செயல்பட்டு கத்தியால் வீசியதில் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றின் இடது புறத்தில் காயம் ஏற்பட்டது என்றார் அவர்.

"சம்பவம் நடந்த அன்றே காலை 10.45 மணிக்கு சாலாக் செலாத்தான் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் அந்தச் சிறுவனைக் கைது செய்ததோடு கத்தியையும் பறிமுதல் செய்தனர்," என்று கூறிய அவர், குற்றவியல் சட்டம் பிரிவு 324-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப் படுவதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.