ஷா ஆலம், மார்ச் 12 – ரமலான் மாதத்தை முன்னிட்டு, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தங்களின் பெருநாள் முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய உதவும் வகையில், டுசுன் துவா மற்றும் செமினி சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 2,000 பேருக்கு 'ஜோம் ஷோப்பிங் ஐடில்ஃபித்ரி' வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்கள் இத்தொகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
டுசுன் துவா தொகுதியில் 900 பேருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்களும், செமினி தொகுதியில் 1,100 பேருக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்களும் வழங்கப்பட்டுள்ளன.
மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களுக்கும் டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந்த உதவி, பயனாளிகள் தங்கள் குடும்பத்துடன் ரமலான் மாதத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விடுத்திருந்த அறிவிப்பில், இந்த ஆண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 38,400 வவுச்சர்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்காக மாநில அரசு மொத்தம் 7.68 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் பெருநாள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில், இந்த வவுச்சர்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடு எதிர்வரும் மார்ச் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 18-ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








