டூசுன் துவா மேம்பாடு சீராக இருக்க வேண்டும்: சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயங்களைத் தவிர்க்க வலியுறுத்து

2 ஜூன் 2026, 6:25 AM
டூசுன் துவா மேம்பாடு சீராக இருக்க வேண்டும்: சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயங்களைத் தவிர்க்க வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 2: ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட இயற்கை அழகின் காரணமாக சிலாங்கூரில் உள்ள  டூசுன்   துவா (Dusun Tua) ஒரு சூழலியல் சுற்றுலாத் தலமாக (Ecotourism) தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சுங்கை சொங்காட் (Sungai Congkak), சுங்கை காபாய் (Sungai Gabai) மற்றும் குனோங் நுவாங் (Gunung Nuang) போன்ற இடங்களுக்கு வார இறுதி நாட்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர் என்று அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வீரா ஜோஹான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையின் இந்த வளர்ச்சியானது சிறு வணிகங்கள், முகாம் தளங்கள் (campsite) மற்றும் தங்குமிடங்கள் மூலமாக உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

" டூசுன்   துவா ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், மலைப்பகுதிகள் போன்ற இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. தற்போது முகாம் தளங்கள் மற்றும் ஓய்வு விடுதிகளும் (Resorts) அதிகரித்து வருகின்றன. இது பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது" என்று மீடியா சிலாங்கூர் தயாரிப்பான SKOP நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுற்றுச்சூழலின் சமநிலையை பாதிக்காத வகையில் சுற்றுலாத் துறை மேம்பாடுகள் நிலையான முறையில் திட்டமிடப்பட வேண்டும் என்று ஜோஹான் வலியுறுத்தினார்.

சேற்று வெள்ளம் (Banjir Lumpur) உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நில அகழ்வாராய்ச்சி அல்லது மேம்பாட்டுப் பணிகளுக்கும் உள்ளூராட்சி மன்றத்தின் (PBT) ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவது அவசியம் என்றார் அவர்.

"மலைப்பகுதிகளில் நிலத்தை சீரமைத்ததால், சிவந்த நிறத்திலான நீரும் சேறும் அருகில் உள்ள சாலைகள் மற்றும் கிராமங்களில் பெருக்கெடுத்து ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அதன் பாதிப்புகள் கீழே வசிக்கும் மக்களைப் கடுமையாக பாதிக்கும் என்பதால், நிலப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு உள்ளூராட்சி மன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டியது கட்டாயம்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், உள்கட்டமைப்பு வசதிகளை, குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கனரக வாகனங்களின் பெருக்கம் மற்றும் குறுகலான சாலைகள் காரணமாக நெரிசல் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து அப்பகுதி மக்கள் அதிக அளவில் புகார்களைத் தெரிவித்து வருவதாக ஜோஹான் கூறினார்.

"டுசுன் துவாவில் உள்ள பிரதான சாலையின் ஓரத்தில் பல பள்ளிகள் அமைந்துள்ளதாலும், விபத்து அபாயம் அதிகம் இருப்பதாலும் அச்சாலையை அகலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து சீராக இருக்க, பத்து 9-லிருந்து (Batu 9) பத்து 14 உலு லங்காட் (Batu 14 Hulu Langat) வரையிலான சாலையை அகலப்படுத்தும் திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்," எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.